திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே பழஞ்சூரில் உள்ள பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக உள்ளார். அந்த தோட்டத்திலேயே தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி (54). கணவருடன் அந்த தோட்டத்திலேயே ரேவதி தங்கி உள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றும் உள்ளது. அந்த வீட்டில் இவரது மகன்கள் வசித்து வருகின்றனர். ரேவதி மட்டும் மகன்களை பார்க்க வீட்டிற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

Advertisment

Husband and wife

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரேவதி வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த அவரது மகன்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் மாரிமுத்து தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவருக்கு அருகே சிறிது தூரத்தில் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு, தலையில் காயங்களுடன் தாய் ரேவதி இறந்து கிடந்தார் என கூறப்படுகிறது.

இதனை கண்டதும், அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

Advertisment

இதைதொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து, ரேவதியை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். அப்போது வலி தாங்கமுடியாமல் ரேவதி, அவரிடம் இருந்து தப்பித்து தோட்டத்தின் வழியாக தப்பி ஓடியதாகவும், இருப்பினும் மாரிமுத்து அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி, தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு மாரிமுத்து, அதே தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.