புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்பவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் லட்சுமணன்(20), அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சரவணன் மற்றும் அவரது மாமா தேக்கமலை ஆகியோர் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி காடுகளில் வேட்டையாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் இவர்கள் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, அந்த நாட்டுத் துப்பாக்கியில் வெடி மருந்து செலுத்தி சுட முயன்ற போது சுடமுடியவில்லை. காரணம் வெடிமருந்து செலுத்தும் பகுதியில் உள்ள ஓட்டை பெரிதாக இருந்ததால் அந்த ஓட்டையை அடைத்து சிறியதாக்குவதற்காக அதே கிராமத்தில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் பட்டறையில் வெல்டு வைக்க கொண்டு சென்றுள்ளனர். ஆறுமுகம் வெல்டிங் செய்த போது துப்பாக்கு இரும்பு குழாய் அதிக சூடாகி ஏற்கனவே துப்பாக்கி குழாயில் செலுத்தப்பட்டிருந்த வெடி மருந்துடன் துப்பாக்கி வெடித்து சிதறியுள்ளது.
துப்பாக்கி வெடித்து சிதறிய இந்த சம்பவத்தில் லட்சுமணன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், சம்பவத்தின் போது லட்சுமணன் கூட இருந்த சரவணன் மற்றும் அவரது மாமா தேக்கமலை ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஆறுமுகம் தலைமுறைவாக உள்ளதால் அவரைத் தேடி வருகின்றனர். வெல்டிங் செய்யும் போது வெடித்து லெட்சுமணன் உயிர் போக காரணமாக இருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத் துப்பாக்கியையும் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி மனோகர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, இலுப்பூர் கோட்டாட்சியர் பெரியநாயகி, வட்டாட்சியர் சூரியபிரபு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞர் லட்சுமணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது? யார் செய்து கொடுத்தது? என்பது குறித்தும் அது எவ்வாறு வெடித்தது என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.