Skip to main content

இளைஞனை நேரில் வரச்சொல்லி உதவி செய்த மனிதாபிமான எஸ்.பி!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Humane SP who helped the young man

 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தக் காலகட்டத்தில் உழைப்பால் பசியாறும் மனித சமூகத்தினுடைய வாழ்வியல் போராட்டம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை அவர்களுக்குள் ஏற்படுத்தி வருகிறது. நடுத்தர வர்க்கம் முதல் சாதாரண கூலித் தொழிலாளிகள் வரை இன்றைய சூழ்நிலையில், அவர்களை மிகவும் பாதித்துவருகிறது. இந்த நிலையில்தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஒரு இளைஞர் தனது பெற்றோர்களைக் காப்பாற்றுவதற்காக குறிப்பாக, அவரது தந்தை ஒரு பெட்டிக்கடை வைத்துள்ளார். அதுவும் அந்த வயதானவர் ஒரு  மாற்றுத்திறனாளி. அந்தக் குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து அந்த இளைஞர் ஈடுபட்ட செயல் என்பது சட்ட விரோதம். அவருக்கு அது தெரியவில்லை. அவர் செய்தது முழுக்க முழுக்க சட்ட மீறல்தான். ஆனால், திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், இளம் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை நேரில் வரவழைத்து அவரின் பிரச்சனைகளைக் கவனமுடன் கேட்டுள்ளார். அந்த இளைஞனின் குடும்பச் சூழல் எஸ்.பி.யை மிகவும் வருத்தமடைய செய்தது.

 

அந்த இளைஞர், தனது தந்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதோடு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், இந்தக் காலகட்டத்தில் தனக்கு நிதியுதவி எதுவும் கிடைக்காத பட்சத்தில் தவறான இந்தச் சட்டவிரோத வேலையில் தெரியாமல் ஈடுபட்டதாகவும் அந்தக் கல்லூரி மாணவர் தெரிவித்துள்ளார். இதை முழுமையாக விசாரித்த மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி, அந்த இளைஞனரிடம் மனிதாபிமனத்துடன் என்ன தேவை என கேட்டுள்ளார். அந்த மாணவனுக்குத் தேவையான கல்லூரி கட்டணத்தை முழுமையாக தனது சம்பளத்திலிருந்து செலுத்துவதாக கூறியதோடு, உடனடியாக அந்த தொகைக்கு தனது வங்கிக் கணக்கில் செக் போட்டு கொடுத்துள்ளார்.

 

அவரது தந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கும் அவர் உதவுவதாகவும் கூறி இனிமேல் இதுபோன்ற சட்ட விரோத செயலில் எக்காரணத்தைக் கொண்டும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அந்த சாதாரண குடும்பத்திலிருந்து வந்த  மாணவனிடம், “சமூகத்தில் உன்னைப் போன்ற இளைஞர்கள் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உன்னைப் போன்றவர்கள் முன்னேறி வர வேண்டும்” என நம்பிக்கை வார்த்தை கூறி மருத்துவ செலவுக்குத் தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பிவைத்துள்ளார்.

 

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியின் இந்த மனிதாபிமான செயல், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எனவும், இதுபோல் காவல்துறையில் நடப்பது மிகவும் அரிதானது என்றும் சக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள். மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என திருப்பத்தூர் மாவட்ட சமூகநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தண்ணீர் கேட்டு பேசிய வார்டு உறுப்பினரை அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்! 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
The husband of the Panchayat Council Chairman slandered the ward member who asked for water!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வராததால் 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கே பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தொலைப்பேசியை எடுத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவின் கணவர் சரவணனிடம், 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தன் வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு சரவணன் இதெல்லாம் பிரச்சனைன்னு இன்னொரு முறை பேசன.. என அவதூறாக பேசியதாக கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 8வது வார்டு உறுப்பினர் இளமதி ஆகியோர் கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரவணனை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவுக்கு பதிலாக அவருடைய கணவர் செயல்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் பேசியதால் தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.‌