தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மீது போலீசார் நடித்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேரின் உடல்கள் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. அதனை மறுபடியும் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 30ம் தேதி அன்று ஆணையிட்டது.
அதன்படி, ஜிப்மர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அம்பிகா பிரசாத், மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்பு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட அந்த 7 பேரின் உடல்களில் சண்மூகம், கந்தையா, கார்த்திக், காளியப்பன், செல்வசேகர் ஆகிய 5 பேரின் உடல்கள் இன்று காலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களின் ஒவ்வொருவரின் உடல்களும் ஒரு தாசில்தார் தலைமையில் உடன் போலீஸ் ஏடிஎஸ்பி மற்றும் போலீஸ் படையை கொண்ட பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் குறுக்குச்சாலையை சேர்ந்த தமிழரசன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். பின்னர் அவரது உறவினர்களுடன் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, இன்று அவரது உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்ற வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். இருப்பினும் அவரது உடலை ஒப்படைக்க அவரது உறவினருடன் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே மீதமுள்ள 6 உடல்கள் இன்னும் உடற்கூறாய்வு செய்யாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதே பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று மாநில மனித உரிமை ஆணையத்தினர் ஜெயசந்திரன், சித்ரன்ஜன் மோகன்தாஸ் தலைமையிலான குழுவினர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி வந்தனர். அங்கு அவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். அவர்களிடம் நடந்ததை விளக்கிய கலெக்டர், கலவரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமாக்கப்பட்டது குறித்தும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டது குறித்தும் காட்டினார்.
அதன் பின்பு மதியம் 1 மணி அளவில் அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தினர் விசாரணை செய்தனர். நாங்கள் அமைதியாக பேரணியாக சென்றோம். 3வது மைல் சென்றவுடன் போலீசார் எங்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் எங்களை அடித்து விரட்டினர். கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது துப்பாக்கியால் சுட்டனர். இன்னொரு பக்கம் போலீசார் கல்லால் அடித்தே சிலரை கொன்றார்கள் என்றும் தெரிவித்தனர். மற்றொரு தரப்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது என் பக்கத்தில் வந்தவர் குண்டு காயம்பட்டு கீழே விழுந்தார்.
அவரை நான் தூக்க சென்ற போது என் காலின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று கிளிண்டன் என்பவர் கூறினார். அங்கிருந்த சிலர் எங்கள் மீது வழக்கும் போட்டிருக்கிறார்கள் என்று சொன்ன போது, அது ஒன்றும் ஆகாது அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று மனித உரிமைகள் ஆணையர்கள் அவர்களிடம் ஆறுதலாக சொன்னார்கள். இன்னும் பலரை விசாரிப்பதற்காக மனித உரிமை அங்கையே உள்ளனர்.
போலீசார் கல்லால் அடித்தே கொன்றார்கள்: தூத்துக்குடியில் ம. உ. ஆணையத்தினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்
சார்ந்த செய்திகள்
Next Story
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Next Story
“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.