இந்தியாவில் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்த மருந்து வேலைசெய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்றுள்ள சூழலில், இதனைக்கொண்டு மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கும் சோதனையை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அனுமதியளித்தது. இதில், முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களின் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பங்கேற்றவர்களுக்கு எந்தவிதப் பக்கவிளைவும் ஏற்படாத நிலையில், கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் நுழைந்துள்ளது. தமிழகத்தில் காட்டான்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 100 பேருக்கு இந்தப் பரிசோதனை விரைவில் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.