Human and dog feces on top of the drinking tank. - People's struggle.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து வ.உ.சி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குதினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேலே சென்று பார்த்த போது அங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் மனித மற்றும் நாய்களின் மலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் அதிகளவில் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணியம், நவலாக் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றிவிட்டு தண்ணீர் தொட்டியை முழுவதுமாக சுத்திகரிப்பு செய்து பின்னர் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அதுவரை பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலமாக இலவசமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அளிக்கப்பட்ட உறுதி மொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இந்நிலையில் அந்தக் குடிநீர் தொட்டியின் மேல் பகுதி சுத்தம் செய்யும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே தமிழ்நாட்டின் சில இடங்களில் குடிநீர் தொட்டி நீரில் மனித மலமும் விலங்குகளின் வளமும் கலந்து இருந்தது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.