Skip to main content

பிரமாண்ட நடராஜர் சிலை... ஒப்படைப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, நக்கீரன் ஆசிரியர் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

 

பத்தாண்டுகால உழைப்பில், நான்குகோடி மதிப்பீட்டில் 23 அடி உயரம், 17 அடி அகலம், 15 டன் எடை கொண்ட உலகிலேயே மிக பிரம்மாண்ட நடராஜர் சிலையை பழமையான விக்ரக அமைப்பிலேயே உருவாக்கி சிறப்பு வழிபாடு நடத்தி, அதனை முறைப்படி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை திம்மக்குடி கிராமத்தில், கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்கிற சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அங்கு முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பல்வேறு சிலைகளை தயார் செய்து இந்தியா உள்ளிட்ட  பல நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

 

கோனேரிராஜபுரத்தில் உள்ள 8 அடி உயரத்துடன் உள்ள பிரமாண்ட நடராஜர் சிலைதான் இதுவரை உலகிலேயே பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையாக இருந்து சிறப்பு பெற்றுவருகிறது. இந்த சாதனையை முறியடிக்க கடந்த 2006ம் ஆண்டு அதைவிட பெரிதாக 11 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலையை இந்திய அரசின் ஏற்பாட்டில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அணு ஆராய்ச்சி மையத்தில் வைப்பதற்காக தயார் செய்துகொடுத்து புதிய சாதனையை படைத்தார். அந்த சிலையே இதுவரை உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்தது. இருப்பினும் தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்திட திட்டமிட்டு பல இடங்களில் உதவியை நாடினார். பிறகு நக்கீரன் ஆசிரியரின் உதவியோடு 23 அடி உயரத்தில் நடராஜர் சிலையை அதுவும் ஒற்றை வார்ப்பில் செய்துமுடித்திருக்கிறார்.

 

கடந்த 2010ம் ஆண்டில் சிலை தயாரிக்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். முதற்கட்ட பணிகளை தொடங்கி 2012ம் ஆண்டு வரை அந்தப் பணி நடைபெற்றது, இதன் பிறகு பொறுப்பேற்ற நபரால் தொடர்ந்து இந்த முயற்சியில் உதவிட  முடியாமல் போக, இனி இந்த சிலை அவ்வளவுதானா என சோர்வடைந்து போனவருக்கு இரண்டு ஆண்டுக்கு பிறகு நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் மூலம், வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீடம் கிடைத்துள்ளது. 

 

பிறகு மீண்டும் பணிகள் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் நிறைவில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 25,000 சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்போடு சிலை முழுமை பெற்று அதனை புதுச்சேரி ஆளுநர் தமிழை, மற்றும் நக்கீரன் ஆசிரியரின் முன்னிலையில் வேலூர் லட்சுமி பீடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

 

இந்த பிரமாண்டமான நடராஜர் சிலைக்கு சோமவார தினமான செப்டம்பர் 12ம் தேதி மாலை பிரதோஷ வேளையில், நந்தி வாத்தியங்கள் முழங்க, புனித நீர் நிரப்பிய கடங்களை வைத்து தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் சிறப்பு யாகங்கள் நடத்தினர். இறுதியாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நக்கீரன் ஆசிரியர், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ் ஆகியோர் சிலையை வடிவமைத்த கலைஞர்கள் ஆகியோருக்கு அபிஷேகம் செய்தும், உதிரி மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர்.

 

தொடர்ந்து, பிரமாண்டமான நடராஜர் சிலைக்கு சிவனடியார்கள் முன்னிலையில் விபூதி, பால், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது. அப்போது 20க்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. உதிரி ரோஜா மலர்கள் தூவ, இப்பிரம்மாண்டமான சிலையை டாக்டர் தமிழிசை சௌதர்ராஜன் முறைப்படி லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், “23 அடி உயர பிரமாண்ட நடராஜர் சிலையை ஸ்தபதிகள் சீனிவாசன், வரதராஜ் மற்றும் மயூத் ஆகியோர் படைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் 10 ஆண்டுகள் பொறுமையாக எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் மிக சிறப்பாக அழகாக வடிவமைத்து, நம் இந்திய கலையை கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது பணி அமைந்துள்ளது. அவர்களை பாராட்டுகிறேன். இப்பணிக்கு பக்க பலமாக இருந்த நக்கீரன் ஆசிரியரையும், வேலூர் நாராயணி பீடம் அம்மாவை பாராட்டி மகிழ்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.