Skip to main content

நெல்மூட்டைகள் வரத்தால் போக்குவரத்து பாதிப்பு...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

image

 

கடலூர் அருகே விருத்தாசலம் வேளாண் விற்பனை கூடத்திற்கு அதிக நெல் மூட்டைகள் வந்ததால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடம்.   மாவட்டத்திலேயே  மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமான இங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர்,  மங்கலம்பேட்டை, கம்மாபுரம், வேப்பூர் மட்டுமல்லாமல் அரியலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் நெல், உளுந்து, சோளம், கம்பு, எள், மணிலா உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.  

 

அதிகப்படியான விவசாயப் பொருட்கள் இங்கு வருவதால் கூட்டத்தைக் குறைப்பதற்காக விவசாயிகளின் நலன் கருதி சம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் விவசாயிகளின் சாகுபடி மற்றும் அறுவடைை செய்யும் பகுதிகளிலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்து வந்தது. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிக அளவு மூட்டைகள் வராத வண்ணம் சீராகக் கொள்முதல் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடத்திற்கான குறுவை நெல் சாகுபடி தொடங்கியும் விருத்தாசலம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் நெல்மூட்டைகளை விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கொண்டு வருகின்றனர். 

 

அதன்படி நேற்று முன்தினம்  விற்பனைக்காக குவிந்த 4 ஆயிரம் மூட்டைகள் விற்பனை செய்யாமல் குடோனிலேயே இருந்ததினால் வெளியிலிருந்து வரும் மூட்டைகளை உள்ளே அனுமதிக்காமல் சாலையிலேயே நிறுத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர்கள், லாரிகள் அனைத்தும் விருத்தாசலம்- கடலூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் வரிசையாக நின்றன. தொடர்ந்து இரவு ஏழு மணி ஆன போது வாகனங்கள் அதிகரித்து சாலைகளில் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வரிசைப்படி வாகனங்கள் நிற்காமல் ஒன்றுக்கொன்று இடித்தபடி சாலையின் நடுவிலேயே நின்றதால் போக்குவரத்து முழுவதும் தடை ஏற்பட்டது. 

 

image

 

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து வாகனங்களை சரி செய்து பின்பு உள்ளே கொண்டு செல்ல உத்தரவிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'மழை காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விடக்கூடிய சூழ்நிலையில் விவசாயிகள்  கொண்டு வந்த நெல் மூட்டைகளை உள்ளே கொண்டு செல்ல விடாமல் ஏன் வெளியில் நிறுத்தி வைக்கிறீர்கள்?' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, காவலர்கள் ஒவ்வொன்றாக  வரிசைப்படுத்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.