Skip to main content

'இவ்வளவும் குப்பைக்கு போனால் எங்கள் வாழ்வு எப்படி மணக்கும்' -வேதனையில் பூ விவசாயிகள்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

How will our life smell if so much goes to waste - Flower farmers in agony

 

'கிலோ 5 ரூபாய்க்கு விற்றாலும் தினமும் 5 டன் பூ குப்பைக்கு போனால் எப்படி விவசாயிகள் வாழ்க்கையில் நறுமணம் வீசும்?' இப்படி ஒரு கேள்வியைத் தான் பூ விவசாயிகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள் பூ சாகுபடி செய்த விவசாயிகள்.

 

மதுரை, திருச்சி பூ சந்தைக்கு அடுத்தது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பூ சந்தை. பூ விற்பனை அதிகம்.  அதாவது, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கனகாம்பரம் பூ மட்டுமே அதிகமாக விவசாயம் செய்த விவசாயிகள் தங்கள் தோட்டத்திலேயே உள்ளூர் வியாபாரிகளிடம் விற்றனர். அதன் பிறகு மல்லிகை, முல்லை, காட்டுமல்லி, ரோஜா, சம்பங்கி, செண்டி என அனைத்து வகை பூக்களையும் பயிரிட்டனர். தோட்டத்தில் பறிக்கும் பூக்களை கீரமங்கலத்தில் உள்ள பூ கமிசன் கடைகள் மூலம் விற்பனைக்கு வர புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் என பல மாவட்ட வியாபாரிகளும் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர். ஒரு நாளைக்கு சுமார் 10 டன் பூக்கள் விற்பனை நடந்து வருகிறது. ஆனால் பூக்களுக்கு நிரந்தரமான விலை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு விலை தான். பண்டிகை, சுப முகூர்த்த நாட்களில் ஆயிரங்களில் விலை போகும் பூக்கள் மற்ற நாட்களில் கிலோ ரூ.5, 10 க்கும் 100, 200 க்கும் விற்பனை ஆகும்.

 

அதிலும் ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சொல்லவே வேண்டாம் விலை குறைவுதான். கடந்த சில மாதங்களாக சம்பங்கி பூக்கள் கிலோ ரூ,5, 10, 20 க்கு விற்பனை செய்யும்போது கூட ஒரு நாளைக்கு 5 டன் வரை பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கி குப்பைக்கு போகிறது. இதனைப் பார்த்து வேதனைப்படாத விவசாயிகளே இல்லை.

 

இது குறித்து பூ விவசாயிகள் கூறும் போது, 'தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அத்தனை வகை பூக்களும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பருவ காலத்தை தவிர மற்ற நாட்களில் விற்பனை மந்தமாக இருக்கும். அந்த நேரங்களில் உற்பத்தி செலவு, பூ பறிக்கும் கூலிக்கு கூட விற்பனை ஆகாது. சம்பங்கி பூ பறிக்க கிலோவுக்கு ரூ.20 கொடுக்கனும் உற்பத்தி செலவு தனி ஆனால் கமிசன் கடையில் விற்பனையாவது கிலோ ரூ.10. இதில் விவசாயிகளுக்கு பறிக்கும் கூலி கூட நட்டம். அதேபோல பூ தேவை குறைவாக இருப்பதால் 10 ரூபாய்க்கு வாங்கிய பூக்களை விற்கமுடியாமல் கமிசன் கடைகாரங்களுக்கும் நட்டம். இப்படியே தொடர்ந்து நட்டப்படுவதே வழக்கமாகிப் போச்சு. தினமும் 3 முதல் 5 டன் வரை பூக்கள் குப்பைக்குத் தான் போகிறது.

 

ஒரு நறுமண தொழிற்சாலை இருந்தால் குறைந்த விலை விற்றாலும் வீணாகி குப்பைக்கு போகாமல் தொழிற்சாலைக்காவது போகும். இப்படி டன் கணக்கில் பூக்கள் குப்பைக்கு போவதைப் பார்த்து விவசாயிகளின் வியர்வையும் உழைப்பும் இப்படி போகுதேன்னு கண்கலங்கிட்டு கடந்து போகத்தான் முடிகிறது' என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.