How many windmills occupy water bodies? - High Court question!

Advertisment

திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் எத்தனை கம்பங்களை அமைத்துள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்டபகுதிகளின் எந்தவித அனுமதியும் பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஸ்பிரிங் ரெனிவெபில் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் 349 காற்றாலைகளை அமைத்து வருவதை எதிர்த்து சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (18/08/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் காற்றாலை நிறுவனத் தரப்பில், ஈரோடு பகுதியில் காற்றாலை மூலம் 300 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனம் காற்றாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதுவரை நிறுவப்பட்ட 125 காற்றாலைகளுக்கான கம்பங்களில் மூன்று கம்பங்கள் மட்டுமே நீர்நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நீர்நிலைகள் மட்டுமல்ல அரசு புறம்போக்கு நிலம், சாலைகளையும் ஆக்கிரமித்துக்காற்றாலைக்கான கம்பங்கள் நிறுவப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, காற்றாலைகளுக்கான கம்பங்களை நீர்நிலைகளில் இருந்து மாற்று வழிகளில் அமைப்பது குறித்தும், கன்னிவாடி பகுதியில் எத்தனை கம்பங்கள் நீர்நிலைகளில் நிறுவப்பட்டுள்ளன என்பது குறித்தும், நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தது.