Skip to main content

சென்னையில் போலி சான்றிதழுடன் செயல்படும் பெட்ரோல் நிலையங்கள் எத்தனை? - காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
How many petrol stations are operating in Chennai with fake certificates? - Commissioner of Police ordered to respond!

 

எத்தனை பெட்ரோல் நிலையங்கள் சென்னையில் போலி சான்றிதழ் மூலம்  செயல்படுகின்றன? இது குறித்து காவல்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க வேண்டுமென்றால், சென்னை காவல் ஆணையரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.  இச்சான்றிதழைச் சமர்ப்பித்தால்தான், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு உரிமம் வழங்கும். இந்தச் சான்றிதழ்களை,  முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெயரில் போலியாகத் தயாரித்து வழங்கிய ஆர்.கே.நகரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்கள்.  கடந்த பிப்ரவரி மாதம்,  சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து,  இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகுமாரின் மனைவி லலிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.பிரதாப்குமார் ஆஜராகி, மனுதாரரின் கணவர்,  சென்னையில் பல பெட்ரோல் நிலையங்கள் தொடங்க காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லாச் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதனால்தான்,  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  ‘போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’  என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த குற்றவியல் வழக்கறிஞர், ‘கடந்த மார்ச் மாதம்   18-ம் தேதி வரை,  இந்தக் கும்பலிடம் போலி தடையில்லா சான்றிதழ்களைப் பெற்று, சென்னை மாநகரில் 32 பெட்ரோல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து,  மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கும், நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கும்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் 32 கடிதங்கள் அனுப்பியும், இதுவரை பதிலில்லை.  கடிதங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து,  கடந்த 8-ம் தேதி நினைவூட்டல் கடிதமும் காவல்துறையால் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

‘மார்ச் மாதம் வரை 32 போலி சான்றிதழ்கள் என்றால், அதன்பிறகு நடந்த புலன் விசாரணையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்ப,  ‘தற்போதுவரை 74 போலி தடையில்லா சான்றிதழ்களை இந்தக் கும்பல் வழங்கியிருக்கிறது.  அதனடிப்படையில் பல இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது’ என்று குற்றவியல் வழக்கறிஞர் பதில் அளித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள்,  ‘போலிச் சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில்,  ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து, உயிர்ச் சேதம் ஏற்பட்டால் யார் இழப்பீடு வழங்குவார்கள்? சட்டரீதியான பல பிரச்சனைகள் வராதா?’  என்று கேட்டனர்.

மேலும் நீதிபதிகள்,  ‘இந்த வழக்கில், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கிறோம். அவர்கள், போலீஸ் அனுப்பிய 32 கடிதங்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். அதுபோல, சென்னையில் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையங்கல் போலி தடையில்லா சான்றிதழ்களுடன் இயங்குகின்றன? என்பது குறித்து,  காவல் ஆணையர்  விரிவான பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மனுதாரரின் கணவர் சிவகுமார் உடல்நலம் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.