மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் அரசு டாக்டரும், காயல்பட்டினத்தில் வசித்து வருகிற திருச்செந்தூர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரின் கணவரும் அடங்குவர். இதையடுத்து இவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் காயல்பட்டினம் அரசு டாக்டர் டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு மூன்று நாட்கள் புற நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்துள்ளார். அதோடு தன்னுடைய கிளினிக்கில் 150 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்ததாகவும் தெரிகிறது. இதனால் அவர் தொடர்புடைய சுமார் 500 க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரப் படையினர் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.
இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டக்குழு, வருவாய்துறை என 450க்கும் மேற்பட்டோர், கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிறியவர் முதல் பெரியவர் வரையிலானவர்களின் உடல் நலம் பற்றிக் கணெக்கெடுத்து வருகின்றனர்.
இதனிடையே கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை முழுக்க, தீயணைப்பு படையினர் மூலமாக, பிரத்யேகமாக வாங்கப்பட்ட அதிநவீன தெளிப்பான் பவர் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.