Skip to main content

எப்படி இறந்தார் தலைமை ஆசிரியர்? காவல்துறை தீவிர விசாரணை! 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

How did the head teacher passes away? Police serious investigation!

 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகரில் வசித்துவருபவர் செல்வராஜ் (58). இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்குப் பொறியியல் படித்த இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். செல்வராஜ், அதே பகுதியில் உள்ள ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி உஷாராணி, உஞ்சினி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். 

 

நேற்று முன்தினம் (05.10.2021) வழக்கம்போல் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் செல்வராஜ், பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான உடையார்பாளையம் நோக்கி புறப்பட்டுள்ளார். ஆனால், இரவான பிறகும்கூட செல்வராஜ் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அதனால், அவரது குடும்பத்தினர் அவர் செல்ஃபோன் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அவர் ஃபோனை எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், அவர் வேலை பார்க்கும் பள்ளியின் சக ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்கள், செல்வராஜ் பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று வெகு நேரம் ஆகிறது என்று தகவல் கூறியுள்ளனர். இதனால், அவர்கள் மேலும் பதற்றமடைந்தனர். 

 

இந்த நிலையில், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருந்து உடையார்பாளையம் வரும் வழியில் சோழன் குறிச்சி அருகே சாலையோரம், ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு அருகே இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த காவல்துறையினர், செல்வராஜ் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து செல்வராஜின் மனைவியும், மகள்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். 

 

செல்வராஜ் வரும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்துள்ளது. சாலையில் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், செல்வராஜ் உடலில், கழுத்தில், இடுப்பில் வெட்டப்பட்டது போன்ற காயங்கள் இருந்துள்ளன. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

இந்த மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. விபத்தில் அவர் உயிரிழக்க வாய்ப்பு இல்லை. மேலும், அவரது கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன. அது எப்படி ஏற்பட்டிருக்கும்? எனவே யாரோ வழிமறித்து அவரை வெட்டிக் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஆசிரியர் செல்வராஜ் மரணம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, விபத்தில் இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

மேலும், ஆசிரியர் செல்வராஜ் அப்பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது உண்டு என்றும் அப்படி பணம் கொடுக்கல் வாங்கலில் யாருக்காவது முன்விரோதம் இருந்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரை வழிமறித்து கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதப் பரிசோதனையில் ஆசிரியரின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.