கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார். அதேபோல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பி.யாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏ.எஸ்.பி.யாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.
டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ரத்தினம் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு தன்னுடைய பாதுகாப்புக்காக இருக்கும் துப்பாக்கி ஏந்திய காவலரிடம், ‘உங்களுடைய துப்பாக்கிகளை எங்கு வைப்பீர்கள்’ என்பது குறித்து கேட்டு அறிந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு தன்னுடைய கன்மேனை பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து கன்மேன், தனது துப்பாக்கியை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்போது, துப்பாக்கி வைத்திருந்த அறைக்கு சென்ற டி.ஐ.ஜி. அந்தத் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்று முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.