
வாடகைதாரர்களிடம் இருந்து வாடகைக் கட்டணத்தை உரிமையாளர்கள் வசூலிக்கக் கூடாதென தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அபாராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சென்னை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அறிவித்துள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது. கரோனா ஊரடங்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மார்ச் 29-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், பெருந்தொற்று நோய்த் தடுப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
ஆனால், பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாத வாடகையைக் கூட வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்றுக் காலத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசும், ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்டது. ஆகவே, பெருந்தொற்றுக் காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, இது சாத்தியமில்லை என்றும், இதுபோல் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ, வீட்டு உரிமையாளர்களோ, யாரும் வழக்கு தொடரவில்லை. இது பொதுநல வழக்கு ஆகாது. மேலும், அரசினுடைய அறிவிப்பு, தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்யவுள்ளதாகவும், மனுதாரருக்கு அபராதம் விதிக்கப் போவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து, வழக்கை நாளை ஒத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.