Skip to main content

சவர்மா சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி; உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் கைது!

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

hotel owner arrested as many people who ate food in became ill

 

நாமக்கல்லில், துரித உணவகத்தில் கெட்டுப்போன ஷவர்மா இறைச்சியை சாப்பிட்ட 14 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக  உயிரிழந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, செப். 16ம் தேதி பிறந்த நாள்  வந்துள்ளது. இதையொட்டி அந்த மாணவி, தன்னுடன் படித்து வரும் 5 மாணவிகள், 7 மாணவர்களுக்கு, நாமக்கல்  பரமத்தி வேலூர் சாலையில்  உள்ள தனியார் துரித உணவகத்தில் விருந்து கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் சிக்கன் ஷவர்மா, சிக்கன் பிரைடு ரைஸ், கிரில்  சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர். 

 

மறுநாள் காலை, ஷவர்மா சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 11 பேர் திடீரென்று வாந்தி எடுத்தனர். சிலர் மயங்கி விழுந்தனர். இதனால்  அவர்கள் தங்கியிருந்த விடுதியே களேபரமாக மாறியது. உடனடியாக சக மாணவ, மாணவிகள் அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அந்த தனியார் துரித உணவகத்தில் ஆய்வு செய்தனர். அங்கு சிக்கன் உணவுகள் கெட்டுப் போயிருந்ததும், குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சி வகைகளை நீண்ட நாள்களாக இருப்பு  வைத்து இருந்ததும் தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து மொத்தம் 42 கிலோ இறைச்சி மற்றும் உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து,  அழித்தனர். உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு குடும்பமே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்  வெளியானது.     நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவருடைய மனைவி சுஜாதா (38). இவர்களுடைய மகள் கலையரசி (14), மகன் பூபதி  (12), சுஜாதாவின் அண்ணன் சுனோஜ், அண்ணி கவிதா ஆகியோர் செப். 16ம் தேதி இரவு, அந்த தனியார் உணவகத்தில் சிக்கன் ஷவர்மாவை வீட்டுக்கு  பார்சல் வாங்கிச்சென்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர்.     

 

இந்நிலையில், செப். 18ம் தேதி (திங்கள் கிழமை) அதிகாலை 5 மணியளவில் சிறுமி கலையரசி படுக்கையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முதல் நாள் இரவு சாப்பிட்ட சிக்கன் ஷவர்மா விஷமாக மாறியிருக்கலாம் என்ற சந்தேகத்தால் சிறுமியின் தாயார், தம்பி, அத்தை, மாமா ஆகியோரையும் தொடர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதேபோல், அந்த தனியார் உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, சிக்கன் உணவுகள் சாப்பிட்ட நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த அஜய் (29), தமிழ்செல்வன் (25), நாமக்கல் ஆண்டவர் நகரைச் சேர்ந்த திலகவதி (39), சிந்துஜா (36), அஜித் தர்ஷன்(14) ஆகியோருக்கும் திடீரென்று உடல்  உபாதை ஏற்பட்டுள்ளது.  இவர்கள் உள்பட அந்த தனியார் உணவகத்தில் குறிப்பிட்ட நாளில் சாப்பிட்டவர்களில் 43 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நகர்மன்றத் தலைவர் கலாநிதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.     

 

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஊடகங்களிடம் கூறியது: “அந்த  துரித உணவகத்தில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் சம்பவத்தன்று இரவு ஷவர்மா, சிக்கன் பிரைடு ரைஸ்,  நான், தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலையில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது  உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே உணவகத்தில் சிக்கன் உணவுகளை சாப்பிட்ட 14 வயது பள்ளிக் குழந்தை இன்று (செப். 18) காலை இறந்து விட்டார். அந்த குழந்தையும்,  பெற்றோரும் அந்த உணவகத்தில் இருந்து பார்சல் வாங்கிச்சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் உணவகத்தில் சாப்பிட்டவர்களில் ஒரே நாளில் 43 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு  உள்ளனர். இவர்களில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உள்பட 24 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் சேர்க்கப்பட்டு  உள்ளனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார் ஆட்சியர் உமா.   

 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கூறுகையில், “ உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு இறந்து போன சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், உணவக உரிமையாளரான நாமக்கல் சிலுவம்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார்(26), சமையலர்கள் சஞ்சய் மகாகுர்(27), தபாஷ்குமார் (30) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவர் மீதும் பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்  நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார். இதற்கிடையே, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கன், பிரைடு ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.