Skip to main content

சினிமா பாணியில் 12 கோடி ரூபாய் நகைகள் கொள்ளை; திசை திருப்பிய கொள்ளையர்கள்... காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்... பிடிபட்ட 9 பேர் கும்பல்!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

hosur muthoot finance incident police investigation


ஓசூரில் சினிமா பாணியில், பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 12 கோடி ரூபாய் நகைகளை கொள்ளை அடித்த வடமாநில கும்பலை பதினெட்டே மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கொள்ளையர்கள் நூதனமுறையில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பினாலும், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை மடக்கிப் பிடித்த பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகைகளுக்கு அடமானத்தின்பேரில் கடன் வழங்கப்படுகிறது. 


இந்நிறுவனத்தின் கிளை மேலாளராக சீனிவாச ராவ் என்பவர் உள்ளார். மாருதி (24), பிரசாந்த் (29) ஆகியோர் அலுவலக ஊழியர்களாகவும், ராஜேந்திரன் (55) என்பவர் பாதுகாவலராகவும் (செக்யூரிட்டி) பணியாற்றி வருகின்றனர். 


ஜன. 22- ஆம் தேதி காலை 09.30 மணியளவில், சீனிவாச ராவ், மாருதி, பிரசாந்த், ராஜேந்திரன் ஆகியோர் நிதி நிறுவனத்தைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது நகைகளை அடமானம் வைப்பதற்காக 3 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஹெல்மெட் அணிந்த நிலையில் 2 பேர் உள்ளே நுழைந்தனர். 


சில வாடிக்கையாளர்கள் ஹெல்மெட்டை வண்டியில் விட்டுவிட்டு வந்தால் யாரேனும் தூக்கிச்சென்று விடுவார்கள் என்பதால் அப்படியே தலையில் மாட்டியபடி அலுவலகத்திற்குள் வருவதும், அங்கு வந்த பின்னர் கழற்றி வைப்பதும் உண்டு. அதனால் ஹெல்மெட் மாட்டியபடி வந்த 2 பேரும் வாடிக்கையாளர்களாக இருக்கலாம் என ஊழியர்கள் கருதி விட்டனர். 


சற்று நேரத்தில் மேலும் மூன்று பேர் அங்கு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் பதற்றம் அடைந்தனர். மர்ம நபர்கள், நிதி நிறுவனத்தின் வாயில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி இருக்கையில் அமர்த்தி, கைகளை பின்பக்கமாக கட்டிப்போட்டு, வாயில், பார்சல் கட்டப் பயன்படுத்தப்படும் டேப் போட்டு ஒட்டினர். 

hosur muthoot finance incident police investigation


அந்த கும்பல், ஊழியர்களைச் சரமாரியாக தாக்கினர். மேலாளரிடம் இருந்த லாக்கர் சாவிகளை எடுத்துச்சென்று, லாக்கர்களைத் திறந்தனர். அவற்றில் இருந்த 25 கிலோ நகைகள், கல்லா பெட்டியில் இருந்த 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பெரிய பெரிய பைகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.


கொள்ளையர்களில் இருவர் ஊழியர்களுக்கு காவலாக நின்று கொண்டனர். லாக்கரில் நகைகளை கொள்ளை அடிக்கும் வேலையில் ஒருவரும், மற்றொருவர் வாயில் கதவுக்கு வெளியிலும் நின்றிருந்தனர். கொள்ளையர்கள் திட்டமிட்டு, விரல் ரேகை அடையாளம் பதிந்து விடக்கூடாது என்பதற்காக கையுறைகளை அணிந்து வந்திருந்தனர். முகமூடியும் போட்டிருந்தனர். இக்காட்சிகள் அனைத்துமே முத்தூட் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. 


கொள்ளை போன நகைகளின் இன்றைய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றார்கள் ஊழியர்கள். 

hosur muthoot finance incident police investigation


சினிமா பணியில் நடந்த இந்த பரபரப்பு கொள்ளை குறித்து தகவல் அறிந்த ஓசூர் ஹட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் ஆகியோரும் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


கொள்ளையர்களிடம் இருந்த செல்போன் சிக்னல் டவரை வைத்து, அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என முதலில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் ஆணேக்கல், சந்தாபுரம், கோலார் ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு தேடினர். இரு மாநில எல்லையோர போலீசாரையும் உஷார்படுத்தினர்.


ஆனால் கர்நாடகாவில் அந்த கும்பல் இல்லை என்பதும், அவர்கள் போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்குச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்பதால், அந்த கும்பல் லாரிகளில் சொந்த மாநிலத்திற்குச் தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதியது போலீஸ். இதையடுத்து ஹைதராபாத் போலீசாரின் உதவியை நாடிய கிருஷ்ணகிரி போலீசார், வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தும்படி கோரினர். 

hosur muthoot finance incident police investigation


ஹைதராபாத் ரிங் ரோடு பகுதியில் வாகனத் தணிக்கை நடந்தபோது, ஷேகிதாபாத் ரிங் ரோடு வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அதை மடக்கி சோதனை செய்தனர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். ஆனால் குறிப்பிட்ட அந்த லாரியில்தான் கொள்ளை போன தங்கம் இருப்பதாக தமிழக போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்து இருந்ததால், லாரியை தீவிரமாக சோதனையிட கேட்டுக்கொண்டனர்.


தீவிர சோதனையில், லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெரிய பெரிய பைகளில் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த லாரியில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள்தான் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ்சில் கொள்ளை அடித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

hosur muthoot finance incident police investigation


இதையடுத்து உடனடியாக கொள்ளையர்கள் 4 பேர், லாரி ஓட்டுநர் ஆகிய 5 பேரையும் தெலங்கானா போலீசார்  கைது செய்தனர். அந்த லாரியை ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது. சந்தேகத்தின்பேரில் காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்களும் ஓசூர் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஓசூர் கொள்ளை சம்பவத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

 

அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ நகைகள், ரொக்கம் மற்றும் 7 கைத்துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள், கத்திகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் தப்பிச்செல்ல பயன்படுத்திய லாரி, கார், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 


பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ரூப்சிங் பகால், அமீத், சங்கர் சிங் பாகல், பவன் குமார், புபேந்தர் மஞ்சி, விவேக் மண்டல், டீக்ராம், ராஜிவ்குமார், லூயில் பாண்டே ஆகியோர் என்பது தெரிந்தது.

hosur muthoot finance incident police investigation

கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?:


எப்பேர்பட்ட கில்லாடி திருடனாக இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிட்டுப் போவான் என்பதுதான் காவல்துறைக்குச் சொல்லப்படும் பாலபாடம். இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழக காவல்துறையினர், முத்தூட் நிறுவன உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது முக்கிய தகவல் கிடைத்தது.


அதாவது, திருட்டு சம்பவங்கள் நடந்தால் காணாமல் போன நகைகள் எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க அடமானமாகப் பெறப்பட்ட நகைகளை தனித்தனியாக பேக்கிங் செய்து முத்தூட் நிறுவனம் வைத்திருந்தது. சில பேக்கிங் கவரில், இருக்கும் இடத்தை காண்பிக்கக் கூடிய ஜிபிஎஸ் 'சிப்' பொருத்தப்பட்டு இருந்தது. இந்த ஜிபிஎஸ் 'சிப்'தான் கொள்ளையர்களுக்கு எமனாக மாறியது. 

hosur muthoot finance incident police investigation


அதேநேரம், கொள்ளையர்களும் தப்பித்துச் செல்லும்போது, புத்தசாலித்தனமாக நிதி நிறுவன ஊழியர்களிடம் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். அந்த செல்போன் எண்களின் சிக்னலை எப்படியும் போலீசார் டிரேசிங் செய்வார்கள் என கருதிய அவர்கள், போலீசாரை திசை திருப்பும் நோக்கில் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்று, அங்கே செல்லும் வழியிலேயே அந்த செல்போன்களை தூக்கி வீசியெறிந்துவிட்டு, அங்கிருந்து லாரியில் தெலங்கானா வழியாக சொந்த மாநிலத்திற்குச் செல்ல முயன்றுள்ளனர். என்னதான் அவர்கள் புத்திசாலியாக இருந்தாலும், ஜிபிஎஸ் 'சிப்' மூலம் அவர்கள் போலீசாருக்கு தாங்கள் செல்லும் இடத்தை தங்களை அறியாமலேயே நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டே போகிறோம் என்பதை அவர்கள் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. 

hosur muthoot finance incident police investigation


விசாரணையில் அவர்கள் மத்தியபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் நடந்த இடத்தில் 5 பேர் மட்டுமே இருந்துள்ளனர். ஆனால், லாரி ஓட்டுநர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனால் மேலும் யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது?; இந்த கும்பல் வேறு எந்தெந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்? என்று கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 


கொள்ளைச் சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்குள் தமிழக போலீசார், தெலங்கானா போலீசார் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து அசத்தியுள்ளனர். இதற்காக அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார். 

hosur muthoot finance incident police investigation


முதல்வர் பாராட்டு:


இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும் கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்று வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.