Skip to main content

ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் சிறுவனின் உடல்; பதற வைக்கும் கொடூர சம்பவம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

The horrific incident that happened to the boy; Police investigation

 

இரண்டு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் சடலம் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ளது திருப்பாலபந்தல் கிராமம். அங்கு வசித்து வந்த குருமூர்த்தி - ஜெகதீஸ்வரி தம்பதிக்கு திருமூர்த்தி என்ற இரண்டு வயது மகன் இருந்தான். கடந்த 17 ஆம் தேதி வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திருமூர்த்தி காணாமல் போனான். திருமூர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்கள் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் எழுந்தது. சிறுவனின் தந்தை குருமூர்த்தி வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் கலைத்து தேட ஆரம்பித்தார். அப்பொழுது குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் இருக்கும் அறைக்குள் இருந்து அதிகப்படியான துர்நாற்றம் வந்தது. உள்ளே சென்று தேட முயன்றபோது, பூனை அல்லது பெருச்சாளி  இறந்திருக்கலாம் என ராஜேஷ் சொல்லியுள்ளார். இதனால் தேடுவதை நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு ராஜேஷ் வெளியே சென்றுவிட்ட பின்னர் மீண்டும் அவர் அறைக்குள் சென்று சோதித்துள்ளனர். அப்பொழுது ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்றின் உள்ளே இருந்து துர்நாற்றம் வருவது அறிந்து அதை உடைத்துப் பார்த்தபோது அதிர்ச்சி தரும் வகையில் சிறுவன் அதற்குள் உயிரிழந்த நிலையில் அடைத்து வைக்கப்பட்டுக் கிடந்தான்.

 

The horrific incident that happened to the boy; Police investigation

 

அழுகிய நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்ட பெற்றோர், கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களைப் பதற வைத்தது. தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தில் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரித்தபொழுது, சொத்து தகராறு தொடர்பாக அண்ணனும், அண்ணியும் சண்டையிட்டு வந்ததால் அவரது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஸ்பீக்கர் பாக்ஸ்க்குள் வைத்ததாக ராஜேஷ் ஒப்புதல் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.