Skip to main content

வீடு புகுந்து கொள்ளை... காவல்துறையிடம் சிக்கிய பெண்!  

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Home burglary ... Woman caught by police

 

ஆள் இல்லாமல் தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு பகலில் கொள்ளையடிப்பது, இரவு நேரங்களில் யார் இருந்தாலும் துணிந்து உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது, விழித்துக்கொள்ளும் வீட்டுக்காரர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டுவது, கட்டிப் போட்டுவிட்டு கொள்ளையடிப்பது இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆண் கொள்ளையர்களால் நடந்துவருகின்றன. ஆனால், தற்போது பெண் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொள்ளையடிக்கும் சம்பவமும் நடக்கத் துவங்கியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எரவார் காட்டுக்கொட்டாய் பகுதியில் நடந்துள்ளது.

 

அந்தப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் பழனிமுத்து, அவரது மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவரும் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு அங்கேயே தங்கி விவசாய வேலையை செய்துகொண்டு வாழ்ந்துவருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் அவர்கள் வீட்டருகே வந்துள்ளார். அந்தப் பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த கன்னியம்மாளிடம் குடிப்பதற்குத் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். கன்னியம்மாள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பம்புசெட் தொட்டியில் தண்ணீர் உள்ளது, அள்ளி குடிக்கப் பாத்திரமும் உள்ளது, அங்கே போய் குடித்துவிட்டுச் செல்லுமாறு கூறிவிட்டு விவசாய வேலையில் மூழ்கிவிட்டார்.

 

கன்னியம்மாள் தன் வயல் வேலைகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் வீட்டுக்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த நகைகளைப் பார்த்துள்ளார். அதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள தாலி செயின், தோடு, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இருசக்கர வாகனத்தில் வந்த பெண்தான் குடிக்கத் தண்ணீர் கேட்ட சாக்கில் வீடு புகுந்து கொள்ளையடித்துள்ளார். இதனை அறிந்த கன்னியம்மாள் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார், பட்டப்பகலில் கன்னியம்மாள் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற அந்தப் பெண் கொள்ளையரைத் தீவிரமாக தேடிவந்தனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் (18.12.2021) காலை கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திலி பகுதியில் சின்னசேலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பரிமளா என்பது தெரியவந்தது. இவர், கன்னியம்மாள் வீட்டில் தான் திருடியதை விசாரணையில் ஒப்புக்கொண்டதோடு, அவரிடமிருந்து கன்னியம்மாள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.