Skip to main content

நள்ளிரவில் அடுத்தடுத்து வீடு புகுந்து கொள்ளை!! அச்சத்தில் கிராம மக்கள்... 

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

Home burglary at midnight !! Villagers in fear

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலையம் அருகே உள்ளது கொ.குடிக்காடு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது மனைவி அங்கம்மாள் வயது 70. இவர் நேற்று முன்தினம் (07.02.2021) நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் கதவைத் திறந்துவிட்டு  வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள், அவர் வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்துப் பார்த்துள்ளனர்.

 

பீரோவில் பணம் நகை எதுவும் இல்லாததால் கோபத்தில் இருந்த கொள்ளையர்கள், அந்த நேரம் பார்த்து வெளியில் சென்ற அங்கம்மாள் வீட்டுக்குள் வந்துள்ளார். அவர் வருவதைப் பார்த்த மர்ம நபர்கள் அங்கம்மாளின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு இதுவாவது கிடைத்ததே என்று சந்தோசத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அந்த மர்ம கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள லட்சுமணபுரம் கிராமத்திற்குள் சென்றுள்ளனர். அங்கு செல்வராணி என்பவரது வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்து 25ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவரும் ராமநத்தம் காவவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரிலிருந்து தசரதன் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில்  கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள்.

 

தொடர் கொள்ளை காரணமாக லட்சுமணபுரம், கொ.குடிக்காடு. பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் எந்த ஊருக்குள் கொள்ளையர்கள் நுழைவார்கள், யார் வீட்டில் நுழைந்து கொள்ளை அடிப்பார்கள், கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதோடு அந்த வீடுகளில் வசிக்கும் மக்களையும் தாக்குவார்களோ, உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்ற பயத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.