
தமிழகத்தில் பல இடங்களில் மழைபொழிந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெல் அலர்ட்டும், கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16-06-25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.