Skip to main content

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் அனுமதி!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து, பதினான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் இயக்க அனுமதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக கனத்த மழை பெய்து வந்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபிணி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கும், அங்கிருந்து மேட்டூர் அணைக்கும் வந்து கொண்டிருக்கிறது. 

 

HOGENAKKAL WATER FALLS DOWN CONTINUE BOAT SERVICE TOURIST PEOPLES HAPPY

 


கடந்த ஜூலை 23ம் தேதியன்று நீர்வரத்து வினாடிக்கு 7500 கன அடியாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன் பிறகு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், பரிசல் இயக்குவதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அங்கிருந்து நீர்திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 4000 கனஅடியாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி காலையிலும் நீர்வரத்து அதே நிலையில் இருந்தது. 

 

HOGENAKKAL WATER FALLS DOWN CONTINUE BOAT SERVICE TOURIST PEOPLES HAPPY

 


இதையடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். பதினான்கு நாள்களுக்குப் பிறகு இன்றுமுதல் (ஆக. 6) மீண்டும் பரிசல் சவாரி பயணம் தொடங்கியிருப்பதால், சுற்றுலா பயணிகளும், பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று ஆகஸ்ட் 6- ம் தேதி அணைக்கு வினாடிக்கு 5699 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 6ம் தேதி 4171 கன அடியாக மேலும் சரிந்தது. 


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. எனினும் நீர்திறப்பைக் காட்டிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி நேற்று அணையின் நீர்மட்டம் 52.97 அடியாகவும், நீர் இருப்பு 19.73 டிஎம்சி ஆகவும் இருந்தது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.