ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 6-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 2 முதல் நடைபெற்று வருகிறது.
இதில் ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி, அரங்கம் எண் 58, 59-ல் ‘ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுத் தடங்கள்’ என்ற தலைப்பில் மாவட்டம் பற்றிய புதிய வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட புகைப்படக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இதை திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் வே.ராஜகுரு, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோர் அமைத்துள்ளனர்.
இதில் பெரிய அளவிலான படங்களுடன் சேதுபதிகளின் ராமநாதபுரம், கமுதி, செங்கமடை கோட்டைகள், பெருமைமிகு ராமநாதபுரம், முகவை பெயர்க் காரணம், மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெரிய அளவிலான பொந்தன்புளி மரங்கள், பழமையான கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், புத்தர், சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள், வணிகப் பெருவழிகள், வணிகக் குழுக்கள், ஊர்களின் வரலாறு பற்றிய 101 புகைப்படங்களும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.