Skip to main content

தந்தை மகனுக்கு ஒரேயிடத்தில் நடுகற்கள்...வரலாற்றாய்வாளர் தகவல்!!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோட்டைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி கூறியதன் அடிப்படையில், தேசூரைச் சேர்ந்த வருவாய் உதவியாளர் ஏ. வெங்கடேஷ் என்பவருடன் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.
 

historical tombstones found near tiruvannamalai


அங்கு பாழடைந்த நிலையில் ஒரு மசூதி போன்ற கட்டிடமும், அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. இவற்றில் 2 நடுகற்கள் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுப்பற்றி, வரலாற்றறிஞர் முனைவர் அர.பூங்குன்றன் ஆய்வு செய்துவிட்டு இதன் முக்கியத்துவதைக் கூறிம்போது, "இரண்டு வரியுடைய இரண்டு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் என்றும் மற்றொன்றில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கீழார் மகன் சீலன் என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில் வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.

சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில் கொற்றம்பாக் கிழார் அவ்வூரை தாக்கியிருக்க வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையே மோதலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும் அவருடை மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதியில் சியமங்கலத்து பாணரைசர் என்ற வசாகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார். இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால் இப்பகுதி பாணரைசர்கள் ஆண்ட பாணாடு ஆக இருக்கவேண்டும் என்றும் இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்து என்றும் இந்நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்றும் கருதலாம். மேலும் பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப்பிடும் கொற்றம்பாக்கிழார் இருந்திருக்க வேண்டும் என்றும் கொற்றம்ப என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம் என்றும் தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ளலாம்" என்றும் குறிப்பிட்டார்.


சீயமங்கலம் என்பது பல்லவர் கால குடைவரை உள்ள ஊர். இது தேசூருக்கு அருகில் 2. கி.மீ. தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வூரில் கிடைக்கப்பெற்ற இந்த நடுகற்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் ஊரில் நடந்த பூசலில் தந்தையும் அவருடைய மகனும் இறந்ததின் நினைவாக எடுக்கப்பட்ட சிறப்பானதொரு நடுகல் ஆகும்.

தமிழகத்தில் கிடைத்த நடுகற்களில் தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இதுவேயாகும். மேலும் இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த காலத்தால் முற்பட்ட எழுத்துடை நடுகற்கள் என்ற சிறப்பினையும் பெறுகின்றன. இந்த நடுகற்கள் இப்பகுதியின் வரலாற்றிற்கும் சிறந்த ஆதாரமாக திகழ்கின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.