பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவைத் தமிழக அரசு இன்று நிறைவேற்றியது. இதுவரை, ஆளுநர் நியமிக்கும் குழுவின் பரிந்துரையின் பேரில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த மசோதா அதனை மாற்ற வழிவகை செய்யும். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யமுடியும்.
தென் மாநிலங்களான தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ள நிலையில் தற்போது தமிழக அரசும் இந்த முயற்சியில் ஈடுபடும் விதமாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது, "பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசுக்கே வழங்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மசோதாவைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி இருக்கும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" தெரிவித்துள்ளார்.