Skip to main content

வரலாற்றுச் சிறப்பான ஆடித் தபசு திருவிழா - கொடியேற்றத்துடன் துவக்கம்!

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

கல்பகோடி காலத்திற்கு முன்பு சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்று இருசமய பக்தர்களுக்கு இடையே கடுமையான போட்டி, வாக்குவாதமாகிப் பின் இரண்டு தரப்புகளும் வெட்டியும் குத்தியும் ரத்தச் சகதியில் மடிந்தனர். பக்தர்களின் இந்த 'நீயா நானா' மோதல்களையும், குருதிப் புனலையும் கண்டு பதறிய தேவாதி தேவர்கள் ஓடுகிற ரத்த ஆற்றைத் தடுக்கிற வகையில் சர்வேஸ்வரனான சிவபெருமானிடம் சென்று பதைபதைப்போடு முறையிட்டவர்கள் எம்பெருமானே தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

 

அவர்களின் வேண்டுதலுக்கிணங்க படைக்கும் பரம்பொருளான சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியைச் சிவனாகவும், மறுபாதியை ஹரியாகவும் இணைந்த அற்புதமான அவதாரத்தோடு பூவுலகில் மோதிக்கொண்டிருந்த பக்தர்களுக்குக் காட்சியளித்தார். காணக்கிடைக்காத ஆதிசிவனின் இந்த அரிய காட்சியைக் கண்ட இருதரப்பு பக்தர்களும் மெய்மறந்து இறைவனை வணங்கி நின்றார்கள். சைவமும் வைணவமும் வெவ்வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அனைத்தும் நானே என்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் எம்பெருமான். அன்றுமுதல் சைவ, வைணவ விவகாரத்திற்கு ஃபுல்ஸ்டாப் விழுந்தது. இரண்டு தரப்பும் ஒற்றுமையானார்கள் என்பது நடந்த வரலாறு காலம் காலமாக வழிபடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சிவபெருமானின் இந்த ஆச்சரிய அற்புத நிகழ்வைப் பற்றி அறிந்த உமையவள், பார்வதிதேவியார், சர்வேஸ்வரனிடம், பக்தர்களுக்குத் தாங்கள் அருளிய அந்த அரிய காட்சியை அடியாளும் காணும் பாக்கியம் தந்தருள வேண்டும் என்று வணங்கி நின்றார். அந்த காட்சியைக் காணவேண்டுமென்றால் பூலோகத்தில் புன்னைவனப் பகுதியில் எம்மை நினைத்து தவம் செய்தால், யாம் காட்சி தருவோம் என்று பார்வதி அம்மையாருக்கு அருள்வாக்கு அளித்தார் எம்பெருமான்.

 

அதனைச் சிரமேற்கொண்ட பார்வதியம்மையார் ஆதிசிவனின் ஆக்ஞயைப்படி பூலோகத்தின் திருத்தலமான புன்னைவனத்தடி வந்தவர் பசுக்கள் சூழ, சிவபெருமானை நினைத்து மா தவம் மேற்கொண்டார். ஆண்டாண்டு காலம் நீடித்த உமையம்மையின் கடும் தவம் கண்டு மனமிறங்கிய சிவபெருமான் தன்பக்தர்களுக்குக் காட்சியளித்த தன் உடலில் ஒன்றாக உருவான அரியும், சிவனாகவும் ஒரு சேர அமைந்த அரிய காட்சியோடு, உன் தவம் கண்டுமெச்சினோம் எனும் திருவருளோடு பார்வதிதேவியாரின் முன்னே பெரும் தோற்றத்தோடு சிவபெருமான் தனக்கு அருளிய அந்த அற்புதக் காட்சி கண்டு மெய்சிலிர்த்த அம்மையார், அருட்காட்சியோடு ஆசீர்வதித்த சிவபெருமானை வலம் வந்து வணங்கினார்.

 

காணக்கிடைக்காத இந்த தெய்வத்திருக்காட்சி பூலோகத்தின் புன்னைவனத்தில் ஆடி மாதம் நல்பௌர்ணமி முகூர்த்தத்தில் நடந்தேறியிருக்கிறது. அந்தப் புன்னைவனப் பகுதிதான் தற்போதைய தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரமாகியிருக்கிறது. தன் உடம்பில் சங்கரனாகவும் மறுபாதியில் நாராயணராகவும் சிவபெருமான் ஒருசேர உருவெடுத்து நின்றதால் சங்கரநாராயணராகி அதே திருக்கோலத்துடனும், சங்கரலிங்கமாகவும், பார்வதிதேவியார் கோ சூழ, தவமிருந்தால் கோமதியம்பிகையாகி தவத்திருக்கோலத்துடன் கூடிய ரூபத்துடன் காட்சியளிப்பது போன்ற மூன்று பெரிய சன்னதிகளைக் கொண்ட சுவாமி சங்கரநாராயணர் கோவில் என்று தமிழகத்திலேயே மூன்று பெரிய சன்னதிகளைக் கொண்ட பெரிய கோவில் நகரமானது. பின்னர் காலப் போக்கில் சங்கரன்கோவில் என்றழைக்கப்பட்டும் வருகிறது. 

 

ஆடிமாத முகூர்த்தத்தில் சர்வேஸ்வரனின் இந்த ஒருங்கே அமைந்த இருபாக காட்சிதான் ஆண்டாண்டு காலமாக ஆடித்தபசு காட்சி திருவிழா என்று பக்தர்களால் பக்தி சிரத்தையோடு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது வரலாறு என்கிறார்கள் ஆன்மீகப் பற்றாளர்கள். அத்தனை சிறப்பு கொண்ட ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவில் நகரில் ஆடி மாதத்தில் 10 நாள் திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படும். இறுதி நாளான 10ம் திருநாளின் போது சிவபெருமான் சங்கரநாராயணராக, கோமதியம்மைக்குக் காட்சியளிப்பார். அந்த அரிய காட்சியைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கில் திரண்டு வருகிற பக்தர்கள் பக்தி சிரத்தையோடு தரிசிப்பர்.

 

வருடம் தோறும் நடைபெற்று வந்த ஆடித்தபசு திருவிழா கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் போனதால் இந்த வருடம் ஆடித்தபசு திருவிழா முழுவீச்சில் வேகம் எடுத்திருக்கிறது. முதல் நாளான இன்று அதிகாலை 5-6 சுபமுகூர்த்தத்தில் சுவாமி சங்கரநாராயணர் ஆலயத்தில் சுவாமி சங்கரலிங்கம், ஸ்ரீ கோமதியம்பிகைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஆலய சன்னிதானத்தின் முன்பிருந்த கொடிமரம் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க பெரிய தீபாராதனையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட போது திரளான பக்தர்கள் தரிசித்தனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

 

ஆதிசிவன் காட்சி கொடுக்கிற ஆடித்தபசின் போது பக்தர்கள் மனமிறங்கி வேண்டுவது நிறைவேறும். வேளாண் மக்கள் தங்களின் விளைபொருளான பருத்தி, கடலை காய்கறி போன்ற இனங்களை அர்ச்சிப்பர். அதனால் விவசாயம் சிறக்கும் என்பது காலம் காலமாக பக்தர்களின் ஐதீகமாக இருந்திருக்கிறது. இந்தக் கொடியேற்ற நிகழ்வில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜ் பங்கேற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.