Skip to main content

தள்ளாத வயதிலும் சலிக்காத காதல்; மரணத்திலும் கணவனை பிரியாத  மனைவி 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

His wife lost their life in the tragedy of her husband passed away

 

98 வயது கணவரின் உடல் முன்பு உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர், திடீரென கணவரின் உடலில் விழுந்து உயிர்விட்ட சம்பவம் துக்க நிகழ்வுக்கு வந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 98 வயது முதியவர் முனுசாமி. இவரது மனைவி கருப்பம்மாள். இவருக்கு வயது 90. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்த தம்பதி அன்புடனும் புரிதலுடன் வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும், இந்த தம்பதியர் ஒன்றாகச் சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். ஆனால், இருவரும் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளனர். பிள்ளைகள் பராமரித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி.. நள்ளிரவு சுமார் 11 மணி அளவில், வயது முதிர்வு காரணமாக முனுசாமியின் உயிர் பிரிந்துள்ளது. ஐயா.. என்னைவிட்டு போயிட்டயே ராசா.. என விண்ணதிர கதறி அழுதுள்ளார். அவரின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியே அழுதால், கருப்பம்மாளுக்கும் எதாவது ஆகிவிடப்போகிறது என நினைத்த உறவினர்கள், அவரை ஆற்றுப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முனுசாமி இறந்துவிட்டதாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் நடைபெற இருந்தது.

 

கணவனை இழந்த சோகத்திலும் மன வேதனையிலும் இருந்த கருப்பம்மாள் டீ காபி கூட குடிக்க மறுத்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை சுமார் 11 மணியளவில் கணவன் உடல் அருகில் அழுது கொண்டிருந்துள்ளார் கருப்பம்மாள். திடீரென அவரது அழுகை அடங்கியுள்ளது. அழுத அசதியில் கருப்பம்மாள் ஓய்வு எடுக்கிறார் என நினைத்த பிள்ளைகள், அவரை சில நொடிகள் தொந்தரவு செய்யவில்லை. பின்னர், எழுந்திரி அம்மா.. என அவரது மகள் எழுப்பியுள்ளார்.. கருப்பம்மாள் உடலில் எந்த அசைவும் இல்லை... பதட்டமான உறவினர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். அப்போதும், கருப்பம்மாள் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் கிடந்துள்ளார்.

 

பின்னர், பரிசோதித்த போதுதான் தெரிந்துள்ளது, கணவன் உயிரிழந்த சோகத்தில் அழுது கொண்டிருந்துள்ள கருப்பம்மாள் கணவர் இறந்த மறுநாளே உயிரிழந்துள்ளார். இதனால், அவரது உறவினர்களும் பிள்ளைகளும் கடும் வேதனையிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். ஏற்கனவே தந்தையை இழந்து தவித்தவர்களுக்கு தாயின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இருவரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்க போனாலும் அம்மாவை கூப்பிட்டு போனீங்களே அப்பா.. இப்ப அம்மாவையும் கூட்டிட்டு போயிட்டீங்களே.. என பிள்ளைகள் கதறியது கூடியிருந்தவர்களையும் கலங்கவைத்துள்ளது.

 

முதிர்ந்த வயதிலும் கணவனை பிரியாமல் வாழ்ந்து வந்த மனைவி, கணவன் இறந்த 12 மணி நேரத்தில் தானும் இறந்திருப்பது கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.