publive-image

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மறைந்தார். கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த அவர், கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக கலைஞர் அவரை நியமித்துக்கொண்டார். இவரது மறைவுக்கு திமுகவினர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சண்முகநாதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது பின்வருமாறு...,

Advertisment

“திமுகவின் தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்து மறைந்த கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

கலைஞரிடமிருந்து பிரிக்க முடியாதது எது? என்றால் அவரது உதவியாளர் சண்முகநாதன் தான் என்று தமிழக அரசியலை அறிந்தவர்கள் கூறும் அளவுக்கு கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர். கலைஞர், அவரது அரசியல் வாழ்வில் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்த போது, அவை எதுவுமே அவருக்கும் சண்முகநாதனுக்கும் இடையிலான உறவை பாதிக்கவில்லை. 50 ஆண்டுகளாக கலைஞருக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு சண்முகநாதனுக்கு உண்டு.

Advertisment

சண்முகநாதனை கடந்த 32 ஆண்டுகளாக நான் அறிவேன். அரசியலைக் கடந்து என்னுடன் நட்பு பாராட்டியவர். என் மீது அன்பும், மதிப்பும் கொண்டவர். கலைஞருக்கான அவரது உழைப்பு வியப்புக்கு உரியது. அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பு ஆகும். சண்முகநாதன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.