நேற்று (03/03/2020) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் ஒரு உத்தரவிட்டிருக்கிறார். அதில் “இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் சாமி சிலை முன் இந்து என்று உறுதியேற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இந்தத் தீர்ப்பை படித்தவுடன் எதற்காக இந்த உறுதியேற்பு? திடீர்னு ஏன் இப்படி ஒரு தீர்ப்பு? என்ற குழப்பம் வருவது இயல்புதான்.
ஆனால், இந்து அறநிலையத்துறையில் இந்துக்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். அப்படித்தான் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்து அறநிலையத்துறையில் வேறு மதத்தவரை நியமிக்க முடியாது. அப்படி இருக்கும்போது உயர்நீதிமன்றம் ஏன் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது?
இந்து அறநிலையத்துறைக்கு ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அரசுதான் நியமிக்கிறது. அவர்கள் அரசு அதிகாரிகள் ஆகிறார்கள். மற்றபடி அறங்காவலர்களும், ஆலயங்களின் நிர்வாகிகளும் இந்து அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் மட்டுமே இந்து அறநிலையத்துறை ஊழியர்களாக கருதப்படுவார்கள்.
இந்து அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி நியமிக்கப்படும் ஊழியர்கள் அனைவரும் தான் பிறப்பால் இந்து என்று உறுதியேற்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், உயர் அதிகாரிகள் அப்படி உறுதியேற்பதில்லை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்தவழக்கில்தான் நீதிபதி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அரசு அதிகாரிகள் மத அடிப்படையில் உறுதியேற்கக் கூடாது என்பதால் அவர்கள் உறுதியேற்பதில்லை என்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறினார். ஆனால், 8 வாரங்களுக்குள் அனைத்து அதிகாரிகளும் சாமி சிலை முன் இந்து என்று உறுதியேற்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
ஆலயங்களில் பணிநியமனம் பெற்றவர்கள் தொடர்ந்து அந்தப் பொறுப்புகளில் இருப்பார்கள். ஆனால், அவர்களை கண்காணிக்கவும் ஆலய நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும் நியமிக்கப்படுகிற அரசு அதிகாரிகள் வேறு பணிகளுக்கும் மாற்றப்படுவார்கள். மதசார்பற்ற ஒரு அரசாங்கத்தின் அதிகாரிகள் தங்களை மதரீதியாக அடையாளப்படுத்துவது எப்படி சரியாகும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அதேசமயம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.