இந்து சமய அறநிலையத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் தீண்டாமை நிகழ்வுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சாதிய வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறுகிறது. இது மிகப்பெரிய தலைகுனிவு எனவும் திருக்குறளை குறித்தான ஆளுநரின் உரை சிறும்பான்மையினர் மீதான வெறுப்பை உமிழ்வதாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும் வைணவ சமய அறநிலையத்துறை என இரண்டாக பிரிக்க வேண்டும். தனித் தனியே அவை இயங்குவதற்கு உரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்” எனக் கூறினார்.
இதற்கு முன் தனது முகநூலிலும் இது குறித்தான பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழக அரசுக்கு வேண்டுகோள் இந்து சமய அறநிலைத்துறையை சைவ சமய அறநிலைத்துறை என்றும் வைணவ சமய அறநிலைத்துறை என்றும் பெயர் மாற்ற வேண்டும்” என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.