Skip to main content

இஸ்லாமியர்களின் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

குரியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி,  இஸ்லாமிய கூட்டமைப்பினர்,  நாளை சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்துவதாக  அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

highcourt verdict

 

அந்த மனுவில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், ஏற்கனவே சட்டவிரோதமாக சென்னை வண்ணாரப்பேட்டையில்   தொடர் போராட்டங்களை  நடத்தி வரும் நிலையில், நாளை அறிவித்துள்ள முற்றுகை போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்ட ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்புள்ளதால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,    அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த ஆட்சேபனையும் இல்லை. காவல்துறையின் அனுமதி கோரி அவர்கள் அளித்த விண்ணப்பமே போராட்டம் அமைதியான முறையில் இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால்,  அமைதியான முறையில் போராட்டம் நடத்த முன்வந்தால், அதற்கு அரசு உரிய நிபந்தனையுடன் அனுமதி அளிக்கத் தயாராக உள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த வகையான முற்றுகை போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது எனவும், முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி கோரி நேற்றுதான் மனு அளித்ததாகவும்,  அந்த மனு காவல்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதியை மீறி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டப்படி ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்தான் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள சட்டவிரோத முற்றுகை போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த மனு குறித்து  மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர்   பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12-க்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.