Skip to main content

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நீதிமன்றம் தடை!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Highcourt ordered to stop build kallakurichi collector office


விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் பல ஆண்டு காலமாகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, கோரிக்கை மனுக்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரித்து அறிவித்தார். 

 

இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் சந்தோஷம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. அதன்படி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக கள்ளக்குறிச்சி அருகில், 5 கிலோ மீட்டர் தூரமுள்ள, வீர சோழபுரம் என்ற ஊரில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிலம், அவ்வூரிலுள்ள அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலம். 


இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு, அறநிலையத்துறை மூலம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு முன்பாக, இந்த நிலத்தைக் கொடுப்பது சம்பந்தமாகக் கருத்துக் கேட்புக் கூட்டம், கடந்த அக்டோபர் 29 -ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறையில், ஆட்சியர் நடத்தியதில், ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் அடிக்கல் நாட்டு விழா நடத்தினார். 


சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை, ரூ.1 கோடியே 98 லட்சத்திற்கு அரசுக்கு வழங்குவது என அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரம் அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை, கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக அளிக்கக் கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். 

 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில் இடத்துக்குச் சரியான விலையை அரசு கொடுத்து வாங்கி, அந்தத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தால், அந்தத் தொகை மூலம் கோவிலுக்கு வருமானம் வருமா என்று கேள்வி எழுப்பினர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆஜரான சிறப்பு அரசு பிளீடர், கோவில் நிலத்தை அரசு குத்தகைக்கு விட ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்து, கேட்கப்பட்டுள்ளது. நிலம், கோவில் பெயரில்தான் இருக்கும். குத்தகை தொகை, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என்று எடுத்துரைத்தார். 
 

cnc


அப்போது நீதிபதிகள், அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு பிளீடர் பிரகாஷ் நாராயணன், அந்த நிலத்திற்குச் செல்ல தற்காலிகச் சாலை அமைக்கும் பணி மட்டுமே தற்போது நடந்து வருகிறது. அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்குத் தற்போது குடிசைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன என்று பதில் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை, பதில் மனுவை வரும் டிசம்பர் 9 -ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் அதுவரை கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் பணிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் இரண்டு நீதிபதிகள் அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவானது கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அந்த மாவட்ட மக்கள். அதே நேரத்தில், ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய நிலத்தை தேர்வு செய்ததில், தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சிக்கல் எப்போது தீரும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.