Skip to main content

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாநில அளவிலான குழு கூட்டம்! – ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த உத்தரவு!

Published on 28/09/2020 | Edited on 29/09/2020

 

highcourt chennai

 


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையைத் தடுப்பதற்காக, கடந்த 1989-ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும், மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கண்காணிப்புக் குழுவைக் கூட்டி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து,  மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள், அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என, கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..

 

இந்த வழக்கு,  நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் டியம் டேய் சார்பில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் குழு, கடந்த 2019- ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 8- ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது  உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. நிர்வாக காரணங்களால், உயர்நிலை கண்காணிப்புக் குழு கூட்டம் கடந்த 2013- ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாத போதிலும், தலைமைச் செயலாளர் தலைமையில், சமூக நலத்துறை மற்றும் மனித உரிமை பிரிவு ஏ.டி.ஜி.பி.,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் முன்னிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இது தவிர, ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கத்  தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Ad

 

தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் தேக்கம் குறைந்துள்ளதோடு, அத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

 


தொடர்ந்து,  இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இனி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலைக் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.