Skip to main content

‘கரோனில்’ என்ற பெயரைப் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு நிறுத்திவைப்பு!

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
highcourt chennai

 

கரோனா வைரசுக்கான மருந்து தயாரிக்க,  'கொரோனில்' என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நிறுத்தி வைத்து,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயனக் கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச் சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027-ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு 'கெரோனில்' என்ற மருந்தினைக் கண்டுபிடித்துள்ளதாக  பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும்,  விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரைப் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தார்.

மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி, மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், 5 லட்சம் ரூபாயை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும்,  பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது,  எதிர்ப்பு சக்தி மருந்துதானே தவிர, கொரோனாவைக் குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து,  பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை தொடர்ந்த மேல் முறையீடு வழக்குகள்,  நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில், கடந்த ஜூன் மாதம் ஆயூஷ் அமைச்சகம் மற்றும் உத்தரகாண்ட் அரசின் முறையான அனுமதி பெற்றே 'திவ்யா கொரோனில்' மருந்து தயாரித்தோம். ஜுலை மாதம் விற்பனையைத் தொடங்கிவிட்ட நிலையில், தனி நீதிபதியின் கடுமையான உத்தரவால் தங்கள் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தங்கள் நிறுவனம் மட்டுமல்லாமல் 'கொரோனா' என்ற பெயரைக் கொண்டு,  ஏற்கனவே 6 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தங்களுக்கு எதிராக எந்த மருந்து நிறுவனமும் வழக்கு தொடராத நிலையில், இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயனக் கலவையைத் தயாரிக்கும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை 2 வார காலம் நிறுத்தி வைத்த நீதிபதிகள்,  வழக்கின் இறுதி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.