Highcourt in chennai

ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கிச் செல்லும்போது, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

தமிழகத்தில் 2020-21ம் ஆண்டு நடத்தவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ஆனந்தபாபுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த, ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.’ என மனுதாரர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்

Advertisment

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘சில ஜாதிகள் சார்பில்தான் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. போராட்டங்களால் எதையும் அடைய முடியாது.மேலும், ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கிப் பயணிக்கும் போது,ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்? ஜாதிவாரியாகப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டனர்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்கமுடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.