Skip to main content

பணியிடை நீக்க உத்தரவு ரத்தாகியும் ஓய்வுகால பலன்கள் வழங்காததை ஏற்கமுடியாது! – பொதுப்பணித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020

 

highcourt chennai

 

பணியிடைநீக்க உத்தரவு திரும்பப்பெறப்பட்ட பின்னரும், ஓய்வுகால பலன்களைத் தராமல் காலம் தாழ்த்தும் பொதுப்பணித்துறையின் செயல்பாட்டை ஏற்கமுடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சகாய மாதாபட்டணத்தைச் சேர்ந்த டி.சங்கர்,  1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, 2007-ஆம் ஆண்டு டிசம்பர் முதல், உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். 2018-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, அவர் ஓய்வுபெற இருந்தார். செயற்பொறியாளர் பதவி உயர்விற்கான பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவர் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்து, பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.  அதனடிப்படையில்,  அவர் ஓய்வுபெற இயலாத சூழல் ஏற்பட்டது.

பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, ஓய்வுகால பலன்களை முழுமையாக வழங்கிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கர்  வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, மனுதாரர் சங்கர் மீதான குற்றச்சாட்டுகளில் சில மட்டுமே உறுதியானதால், அதற்கான,  துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன், பணியிடைநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாகவும், ஓய்வூதியத்திலிருந்து குறைந்தபட்ச தொகையாக, மாதமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட வேண்டுமென்றும், இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார். பணியிடைநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டதால், ஓய்வூதிய தொகையில் 24 ஆயிரம் ரூபாயைத் தவிர, பிற முழுமையான பணப்பலன்களை வழங்க வேண்டுமென வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல், மனுதாரரின் ஒருமித்த கருத்தோடுதான் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்ட பின்னர்,  பணி ஓய்வுபெறும் போது வழங்க வேண்டிய பலன்களை வழங்காமல் இருந்த பொதுப் பணித்துறையின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதன் காரணமாகவே,  மனுதாரர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைச்  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே,  மனுதாரரின் பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அதன்படி மனுதாரருக்கு கிடைக்கவேண்டிய அனைத்துப் பலன்களையும் கணக்கிட்டு நான்கு மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.