
ரகுராமையா முட்டா என்பவர், 1998-ல் இருந்து சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். தனது திருமணத்திற்குப் பிறகு மனைவி பிரவசத்திற்காக, தனது பெற்றோர் வீடான குண்டூருக்குச் சென்றுள்ளார். இவர்களுக்குப் பிறந்த மகளான முட்டா ரீத்திக்கா சுனிதி, தமிழ்நாட்டில் LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, நீட் தேர்வில் 571 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மேற்படி மனுதாரர் ரகுராமையா முட்டா, ஆதிதிராவிடர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர், தமிழ்நாட்டுக்கு 1998-ம் வருடம் குடிபெயர்ந்து, தன் மகளுக்கு இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அனைத்தையும் இணைத்து அனுப்பியும், 03/12/2020 அன்று நடந்த கலந்தாய்வில், அவர், SC-A பிரிவு / பட்டியலில் 5-வதாக இருந்தும் MBBS சீட் மறுக்கப்பட்டது.
இதனால், மேற்படி ரகுராமையா, சென்னை உயர்நீதிமன்றத்தில் W.P. 18702/2020 என்ற நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய மகளுக்கு, அவர் தேர்ந்தெடுத்த சென்னையிலுள்ள அரசாங்க மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பதற்கு, ஆதிதிராவிட அருந்ததியர் இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்க, இடம் கோரியிருந்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் R.C.மனோகரன், R.சுரேஷ்குமார், N.பாண்டியன் மற்றும் M.மாரிமுத்து ஆகியோர் ஆஜரானார்கள்.
மேற்படி மனு, 11/12/2020 அன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மேற்படி மனுதாரரின் மகள் ஆந்திராவில் பிறந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வழங்கிய இருப்பிடச் சான்றிதழை எடுத்துக் காட்டியபோது, மேற்படி மனுதாரர் ரகுராமையா முட்டாவின் ஜாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரகுராமையாவின் ஜாதிச் சான்றிதழ், அவருடைய மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், 12/12/2020 அன்று, மேற்படி மனுதாரரின் மகளை செலக்ஷன் கமிட்டியை அணுகச் சொல்லியுள்ளது, மேலும், மனுதாரின் மகளுக்கு, ஆதிதிராவிடர் அருந்ததியர் ஒதுக்கீட்டையும் மேற்கோள் காட்டியுள்ளது.