உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முழுக்கட்டணம் வசூலித்ததாக, கோவை வடவள்ளி மற்றும் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள இரண்டு சி.பி.எஸ்.இபள்ளிகளுக்கு எதிராக, தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குத் தொடர்பாக பதிலளிக்கும்படி, இரு பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம். அதில், 40 சதவீத கட்டணத்தை, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மீதத் தொகையை, பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வசூலிக்கலாம்.’ எனக் கடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகளுக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,பதிவு செய்ததுசென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரனைக்கு வந்தபோது, பள்ளிகள் சார்பில் ‘அதிக கட்டணம் வசூலிக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே கட்டணங்கள் வசூலிக்கப்படும்.’ என உறுதியளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, அந்த 9 பள்ளிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தார்.
சி.பி.எஸ்.இ பள்ளியைப் பொறுத்தவரை, 32 பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. விசாரணையில், கோவை வடவள்ளி மற்றும் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த பி.எஸ்.பி.பி எனப் பெயர் கொண்ட இரண்டு சி.பி.எஸ்.இபள்ளிகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டுள்ளன.’ என, மெட்ரிக்குலேசன் பள்ளியின் இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
இதையடுத்து, அந்த இரண்டு பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குத் தொடர்பாக பதிலளிக்க இரு தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.