Skip to main content

அரியர் தேர்வை ரத்து செய்ததில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை! - உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை பதில்!

Published on 22/11/2020 | Edited on 22/11/2020

 

HIGHCOURT CHENNAI

 

அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்த பிறகே, அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்ததில், எந்த விதிமுறை மீறலும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில், கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்யக் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அரியர் தேர்வு ரத்து என்பது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது. அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பதில் மனுவில், ‘கரோனா பாதிப்பின் காரணமாக, மாணவர் சமுதாயம், எதிர்பாராத வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு மாணவர்கள் ஆளாகி உள்ளனர்.


முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டு விடுதிகள் காலி செய்யப்பட்டு, மாணவர்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள், விடுதிகளிலேயே தங்களுடைய புத்தகங்கள், நோட்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையும், பாடப் புத்தகங்களையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. பல கல்லூரிகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து என்பது, அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து, குழு அமைக்கப்பட்டு, அதன் முடிவில்தான், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.  இதில் எந்த ஒரு விதிமுறை மீறலும் கிடையாது.

 

cnc


கரோனா ஊரடங்கு நேரத்தில், மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்குச் சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். திருப்தி அடையாத மாணவர்கள், வரும் தேர்வுகளை எழுதி, தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் இல்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது, ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளது. அதன் அடிப்படையில், பல்கலைக்கழகங்கள் சொந்தமாக தங்களது திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும். இது எந்த வகையிலும் மாணவரின் எதிர்காலத்தைப் பாதிக்காது. அரசின் இந்த உத்தரவு,  உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பை மீறுவது ஆகாது. மேலும், பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதால்தான், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அரியர் தேர்வை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.


இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.