Skip to main content

அரியர் தேர்வை ரத்து செய்ததில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை! - உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை பதில்!

Published on 22/11/2020 | Edited on 22/11/2020

 

HIGHCOURT CHENNAI

 

அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்த பிறகே, அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்ததில், எந்த விதிமுறை மீறலும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில், கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்யக் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அரியர் தேர்வு ரத்து என்பது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது. அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பதில் மனுவில், ‘கரோனா பாதிப்பின் காரணமாக, மாணவர் சமுதாயம், எதிர்பாராத வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு மாணவர்கள் ஆளாகி உள்ளனர்.


முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டு விடுதிகள் காலி செய்யப்பட்டு, மாணவர்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள், விடுதிகளிலேயே தங்களுடைய புத்தகங்கள், நோட்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையும், பாடப் புத்தகங்களையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. பல கல்லூரிகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து என்பது, அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து, குழு அமைக்கப்பட்டு, அதன் முடிவில்தான், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.  இதில் எந்த ஒரு விதிமுறை மீறலும் கிடையாது.

 

cnc


கரோனா ஊரடங்கு நேரத்தில், மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்குச் சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். திருப்தி அடையாத மாணவர்கள், வரும் தேர்வுகளை எழுதி, தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் இல்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது, ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளது. அதன் அடிப்படையில், பல்கலைக்கழகங்கள் சொந்தமாக தங்களது திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும். இது எந்த வகையிலும் மாணவரின் எதிர்காலத்தைப் பாதிக்காது. அரசின் இந்த உத்தரவு,  உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பை மீறுவது ஆகாது. மேலும், பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதால்தான், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அரியர் தேர்வை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.


இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.