பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்குப் பதிவுசெய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், குற்ற சம்பவம் பயணத்தின்போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில்தான் விசாரிக்க வேண்டும். விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சிபிசிஐடி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க அதிகாரமுள்ளதாக விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.