
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் புகழேந்தி தேர்தல் ஆணையம், ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுத் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரிவான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 7ஆம் தேதி (07.02.2025) மீண்டும் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கல்யாணசுந்தரம், “உட்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.
இது தொடர்பாக விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் தேர்தல் ஆனையம் விசாரிக்க கூடாது. கட்சியில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு நீடிக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என வாதிட்டார். இவ்வாறு அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.02.2025) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு அளித்தனர். அதில், “கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். அதோடு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.