Skip to main content

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

Published on 23/06/2025 | Edited on 23/06/2025

 

High Court refuses to change the time of the Tiruchendur temple ceremony

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி (07.07.2025) காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் திருச்செந்தூர் கோவிலைச் சேர்ந்த விதாயகர் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்குக்காக தற்போது குறிக்கப்பட்டுள்ள நேரத்தைக் காட்டிலும் அனைத்து முகூர்த்தங்களும் பொருந்தியதாக அதே தேதியில் நண்பகல் 12:05 முதல் 12:47 வரை உள்ள நேரத்தில் தான் குடமுழுக்கு நடத்தவேண்டும் என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (23.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவானது கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்ட  06:00 மணியளவிலேயே நடத்தலாம்.

இதற்கு எவ்வித எந்தவித தடையும் இல்லை. அதே சமயம் வருங்காலங்களில் கோவில் சார்பில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் கோவில் விதாயகரிடம் எழுத்துப்பூர்வமாக நல்ல நேரத்தைக் குறித்து குடமுழுக்கை நடத்த வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில்  வெளியிடப்பட்ட அறிவிப்பில், “கோயில் நன்னீராட்டு விழாவின் போது 8000 சதுர அடி பரப்பில் 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வேள்விச்சாலை, யாகசாலை வழிபாடுகள் நாட்களில் வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதஸ்வரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் காலை 7 மணி முதல் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 64 ஓதுவார் மூர்த்திகள் கொண்ட பக்க வாத்தியங்களுடன் 12 திருமுறை திருப்புகழ் மற்றும் கந்த அனுபூதி ஊதியம் முதல் செந்தமிழ் வேதங்கள் முன்னேற்றத்தால் நடைபெறும். இதன் மூலம் குடமுழுக்கு நிகழ்வின் முன்பாக நடைபெறும் வேள்விச்சாலை முழுவதும் தமிழில் நடைபெறும் என்ற வகையில் செந்தமிழ் வேதங்கள் அனைத்தும் 64 ஓதுவா மூர்த்திகள் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்