High Court questions to vengaivayal case

கடந்த 2022ஆம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிறது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இதற்கிடையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு முன் வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறியது. இதனையடுத்து, அரசு தரப்பில், ‘புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியது.

அதனைத்தொடர்ந்து சென்னை நீதிமன்றம் கூறியதாவது, ‘வேங்கைவயல் வழக்கில் 2 ஆண்டுகளாகியும் ஒருவரைக் கூட கைது செய்ய முடியாதது ஏன்? 2 வாரங்களில் தீர்க்கமான முடிவை அரசு எட்ட வேண்டும்’ எனக் கூறி உத்தரவிட்டுள்ளது.