High Court question in land acquisition case!

நில ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்து கொடுக்காமல், 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டி என்னுமிடத்தில் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம், அரசுத் திட்டத்திற்காக 1988ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ரத்தினம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் ஆர்ஜிதம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 2000ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளாக எந்த மேல் முறையீடும் செய்யப்படவில்லை. கையகப்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணையும் வெளியிடப்படவில்லை. அதேபோல, நிலத்தை ரத்தினம் பெயருக்கு மீண்டும் பெயர் மாற்றம் செய்தும் கொடுக்கவில்லை. இதையடுத்து, நிலத்தை தனது பெயருக்கு மீண்டும் மாற்றம் செய்து தரக் கோரி ரத்தினம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது நீதிபதி ‘கடந்த 20 ஆண்டுகளாக மனுதாரர் பல மனுக்களை அளித்தும், அதன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட ரத்தினத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.’ என உத்தரவிட்டு ‘ இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும். அதிகாரிகள் செய்த பாவத்திற்காக சிலுவை சுமக்க நீதித்துறை ஏசு கிறிஸ்து அல்ல!‘ எனக் குறிப்பிட்டார்.

இதேபோல, 10 ஆண்டுகளாக தனது நில ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து தரவில்லை என வழக்கு தாக்கல் செய்திருந்த பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.