Skip to main content

தனியார் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..! 

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

High Court orders Puducherry government to pay arrears to private hospital


கரோனா சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை வழங்கும்படி புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அரசு பரிந்துரையின் அடிப்படையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்பதை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக ஏ.ஆனந்த் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனை தரப்பில் அரசால் பரிந்துரைத்து அனுப்பப்படுபவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், அவ்வாறு வருபவர்கள் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அரசு பரிந்துரை செய்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தையும், உணவு வழங்கியதற்கான கட்டணத்தையும் அரசு இதுவரை முழுமையாக செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாகும் மருத்துவமனைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் முன் தொகை செலுத்தினால் மட்டுமே சப்ளை செய்ய முடியும் என கண்டிப்புடன் தெரிவிப்பதால் இந்த தொகை விரைவாக விடுவிப்பதற்கு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

இந்த வழக்கில் புதுச்சேரி அரசு இன்று தாக்கல் செய்த  அறிக்கையில், நோயாளிகளின் உணவு செலவிற்காக முன்பணமாக 5 லட்ச ரூபாயை கடந்த அக்டோபர் மாதமும், பின்னர் 15 லட்ச ரூபாயை கடந்த மாதமும் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  

 

அதன்பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காகவும், உணவுக்காகவும் புதுச்சேரி அரசு செலுத்த வேண்டிய தொகையை  செலுத்தாவிட்டால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்கள் எவ்வாறு கிடைக்கும் என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

 

மேலும், அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், நோயாளிகளிடமும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்தும்படி அறிவுறுத்தி, ஆனந்த் வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்