“சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

hc

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் புதுக்குடி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை மற்றொரு பிரிவினர் இடித்துத் தள்ளியுள்ளனர். அதோடு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்குப் பின் இருந்து தான் சாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவில், “ஜூலை 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்த் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (17.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “சட்டத்தினுடைய ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. புதுக்குடி அய்யனார் கோவிலுக்குப் பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது. 

மேலும் கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும் விழாக்களில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய்க் கோட்டாட்சியருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பல்வேறு தலைவர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு ஆலய நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஜாதி அடிப்படையில் கோவிலில் நுழைவதற்கு எவரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

anand venkatesh Ariyalur Court order high court temple
இதையும் படியுங்கள்
Subscribe