
மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை மேலாளராக இருந்தவரும், அதனுடைய விற்பனையாளராக இருந்தவர்களும் ஒவ்வொரு கடைக்கும் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்று வசூலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோவும் டாஸ்மாக் பணியாளர்கள் வாட்ஸ்அப்பில் பரவியது. இதனைத் தொடர்ந்து இது குறித்த வீடியோவை வெளியில் பதிவிட்ட நபர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களான மாயக் கண்ணன், முருகன் மற்றும் ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறுகையில், “ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அந்த ஊழியர்கள் ஊழியர்கள் குறித்து ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள். ஒட்டு மொத்தமாக டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடைபெறுவதாகத் தெரிகிறது. தனியார் மதுபான நிறுவனங்கள் மது விற்பனை நடைபெற்றது. அப்போது அங்கு ஊழல் நடைபெற்றது என்பதற்காக அரசே மதுபான கூடங்களை ஏற்று நடத்துகிறது. ஆனால் அரசு நடத்தும் மதுபான கூடங்களிலும் ஊழல் நடப்பதை அனுமதிக்கக் கூடாது. எனவே தற்பொழுது உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடைபெறுகிறது என்பது மட்டும் உறுதியாகிறது. எனவே டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். அதோடு மனுதாரர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.