Skip to main content

18 பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்; நீதிபதி நேரில் விசாரணை

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

High Court Judge personally visits and conducts   investigation Vachathi hill village women case

 

வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் நாளை (மார்ச் 4, 2023) நேரில் விசாரணை நடத்துகிறார்.   

 

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு சந்தன மரங்கள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த புகாரின் பேரில் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் வீடு வீடாகச் சோதனை நடத்தினர். அப்போது பழங்குடியின ஆண்கள், பெண்கள் பலரை தாக்கி சித்திரவதை செய்ததோடு, 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின.    

 

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர், வாச்சாத்தி வழக்கை சிபிஐ காவல்துறைக்கு மாற்றும்படி வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 1996 ஆம் ஆண்டு சிபிஐ காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தனர். வழக்கின் விசாரணை முடிந்து தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் பலர் உயிரிழந்து விட, எஞ்சிய 215 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், சாதாரண வனக்காவலர்கள் என மொத்தம் 17 பேரில் 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.     

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி  வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.  

 

மேலும், வரும் சனிக்கிழமை (மார்ச் 4, 2023) இந்த சம்பவம் தொடர்பாக வாச்சாத்தி மலை கிராமத்தில் நீதிபதி நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார். அப்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக நீதித்துறை தரப்பில் கூறப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.