Skip to main content

கொள்ளையடிப்பதற்குச் சமம்... டாஸ்மாக் தொடர்பான வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை சரமாரி கேள்வி!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

High Court dissatisfied with Tasmac actions

 

டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, இன்று (14.12.2020) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசுத் தரப்பில், "தமிழகத்தில் உரிய விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, 3,000 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டது. 

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "எது எதுக்கெல்லாம் சி.சி.டி.வி கேமிரா எனும் விவஸ்தையே இல்லையா? பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே மது வாங்க வருகிறார்கள். அப்படி இருக்கையில், மதுவைக் கூடுதல் விலைக்கு விற்பது அவர்களிடமே கொள்ளையடிப்பதற்குச் சமம்" எனக் கருத்துத் தெரிவித்தனர்.

 

தொடர்ந்து பேசுகையில், "கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், கூடுதல் விலைக்கு மதுவை விற்றால், நீதிபதிகளே வந்து ஆய்வுசெய்ய நேரிடும்" என எச்சரித்த நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 07-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து 'நக்கீரன்' இணையதளத்திடம் கருத்துத் தெரிவித்த அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, "மதுக்கடைகள் இல்லாத தமிழகமே எங்களின் நோக்கம். ஆனால், நடைமுறையில் மதுபான விற்பனையில் ஊழல் பெருகிவருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் நான் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலந்து கொண்டேன்.

 

rajeswari

 

அப்போது, டாஸ்மாக்கில் முறையாக ரசீது வழங்கப்படுகிறதா? கொள்ளையடித்து மதுவாங்குபவரிடமே கொள்ளையடிப்பதா? மது தயாரிப்பதற்கு என்ன என்ன பொருட்கள் பயன்படுத்தபடுகின்றன? டாஸ்மாக்கிற்கு, யார் யாரிடம் இருந்து மது கொள்முதல் செய்யப்படுகிறது? என்பன போன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகளால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் திக்குமுக்காடிப் போனார். அரசுத் தரப்பு சி.சி.டி.வி பொருத்தி, உரிய விலையில் மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தது. அதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எது எதற்கெல்லாம் சி.சி.டி.வி என்பதற்கு விவஸ்தையே இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குத் தொடுத்த என்னை, நீதிபதிகள் பாராட்டினர்" இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.